Charity
Tamil Sangam Charity Activities
சாவதை விடத் துன்பமானது வேறொன்றுமில்லையெனக் கருதுதல் தவறேயாகும். ஏனென்றால், ஈந்து உவக்கும் வாய்ப்புக் கிட்டும் போது பொருளுதவியும் செயலுதவியும் கொடுக்கவியலா இருப்பதைக் காட்டிலும் சாவே இனிமையானது என எண்ணவும் தோன்றுமெனச் சொல்லி, தமிழர்தம் பண்பாட்டினை அதன் தம் விழுமியத்தை எடுத்துரைக்க்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படும் அறப்பணிகளுக்கு மனமுவந்து பங்களிக்க அனைவரும் முன்வந்து பெருமை சேர்ப்பீர். திருமிக்க தமிழ்க் குடும்பத்தீர்! இல்லறத்தீர்! மாந்தர்க்கு வருமிக்க இன்னல்களைக் களைந்திடுவோம், நம் பொன்னும் பொருளும் உழைப்பும் நல்கியே!!
ஒவ்வொரு நல்ல மாற்றமும் நம்மில் இருந்தும், நமது இல்லங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும், இது நாட்டு நலனுக்கும் பொருந்தும்.
நமது இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களில் இருந்து தொடங்கும் முன்னேற்றம்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குச் சான்று. அப்படிப்பட்ட நமது கிராமங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லாத நிலை இப்போது உள்ளது. இந்த நிலை மாறாவிட்டால், முன்னேற்றம் என்பது வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடும். அப்படியில்லாமல், கிராமப் பள்ளிகள், நூலகங்கள், மின்சார வசதிகள், நீர் நிலைகள், வாய்க்கால்கள், போக்குவரத்து, சமூக நலக் கூடங்கள் இப்படி கிராம மக்களுக்கு இன்றியமையாதத் தேவைகளை ஏற்பாடு செய்து கொடுப்பதாலேயே நமது கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
இந்த மேம்பாட்டு முயற்சிகளை தலையாயக் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருவதுதான் 'நம் கிராம வளர்ச்சி, நமது பொறுப்பு, எனப்படும் 'Our Village Our Responsibility' குழுவின் நோக்கம். முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும், காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவரும், சல்லிக்கட்டிற்காக ஆவணப்படம் எடுத்தல், வழக்குகளை நடத்துதல், நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல சமூகப் பணிகளைச் செய்து வரும் திரு சிவசேனாபதி அவர்களின் வழிகாட்டுதலிலும், அமெரிக்காவிலுள்ள கவிதா பாண்டியன் அவர்களின் முயற்சிகளிலும், இன்னும் பல சமூக ஆர்வலர்களின் உழைப்பிலும் இந்த இயக்கம் பல்வேறு நலத்திட்டங்களை, விருது நகர் மாவட்டத்திலுள்ள கோட்டையூர், மகாராஜபுரம், கூமாபட்டி, விழுப்புரத்திலுள்ள வணவரெட்டி , அரியலூரிலுள்ள எடயத்தன்குடி போன்ற பலப் பல தமிழக கிராமங்களில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.